நியூசிலாந்து-வெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துவெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து

மவுன்ட் மவுங்கானுயி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. யின்ஸ்டவுனில் நடந்த முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து டி/எல் விதிப்படி வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற்றது. அடுத்து மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நடந்த 2வது போட்டியிலும் நியூசிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.இந்த நிலையில், அதே மைதானத்தில் நேற்று நடந்த 3வது போட்டியில் நிறைய மாற்றங்களுடன் நியூசி. களம் கண்டது. கேப்டன் சவுத்தீ, ஜேமிசன், டெய்லர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. சான்ட்னர் முதல்முறையாக கேப்டனாக களம் கண்டார். டாரில் மிட்செல், ஸ்காட் குகலெஜின், ஹமிஷ் பென்னட் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில்  ஷிம்ரோன் ஹெட்மயர், கீமோ பால் ஆகியோருக்கு பதிலாக ஹேடன் வால்ஷ், ரொமாரியா ஷெப்பர்டு களம் கண்டனர்.டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 2.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு  25 ரன் எடுத்திருந்த நிலையில், மழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது.  பிராண்டன் கிங் 11 ரன் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் வெளியேற, ஆந்த்ரே பிளெட்சர் 4 ரன், கைல்  மேயர்ஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.தொடர்ந்து கனமழை கொட்டியதால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட, நியூசி. அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மொத்தம் 7 விக்கெட்  வீழ்த்திய பெர்குசன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை