நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி

தினமலர்  தினமலர்
நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும்: சீனா உறுதி

பீஜிங் : நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.


சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கி, ஒரு நாள் பயணமாக நேபாளம் சென்றார். இது குறித்து, சீன பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:வெய் பெங்கி, நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா ஆகியோரை சந்தித்து பேசினார்.கொரோனாவால், நிறுத்தப்பட்ட, நேபாளம் - சீனா இடையிலான ராணுவ பயிற்சியை மீண்டும் துவங்குவது குறித்து, பேச்சு நடத்தினார். நேபாள ராணுவத்தை மேம்படுத்த, சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, தெரிவித்தார்.


'ஒரே சீனா' கொள்கைக்கு நேபாளம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அதுபோல, இதர நாடுகளும், தைவான், திபெத் ஆகியவை, சீனாவின் அங்கம் என்பதை ஏற்க வேண்டும். திபெத்தியர்கள், இந்தியாவில், தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்திக்க செல்வதை, நேபாளம் தடுத்து நிறுத்த வேண்டும். நேபாளத்தின் சுதந்திரம், இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு ஆகியவற்றின் பாதுகாப்புக்கு, சீனா ஆதரவளிக்கும் என, வெய் பெங்கி கூறினார்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த மாதம், இந்திய ராணுவ தளபதி நரவானே நேபாளம் சென்றார். இதைத் தொடர்ந்து, நேபாளத்திற்கு, வெய் பெங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை