விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயார்..!! போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படும்; உள்துறை அமைச்சர் அமித்ஷா
டெல்லி: விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், அவர்கள் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரில் போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டில்லியை நோக்கி புறப்பட்டனர். அவர்களை டில்லி எல்லையில் நுழையாதவாறு போலீசார் கண்ணீர்புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க செய்தனர்.இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: விவசாயிகளின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் இந்த கடும் குளிரில் பல்வேறு இடங்களில் டிராக்டர்கள் மற்றும் டிராலியுடன் தங்கி உள்ளனர். அவர்களை எல்லாம் பெரிய மைதானத்திற்கு அழைத்து செல்ல காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் போலீசார் மாற்றம் செய்யும் இடத்திற்கு செல்லுங்கள் .நீங்கள் அங்கு போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கப்படும். டிச.,3 ம் தேதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தைநடத்த விரும்பினால் முதலில் மைதானத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்ற அடுத்த நாளே மத்தியஅரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.