மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு ரூ.37 கோடி பரிசு:12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு ரூ.37 கோடி பரிசு:12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சஜித் மிர் தலைக்கு அமெரிக்கா ரூ.37 கோடி பரிசு அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையின் தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 9 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த அஜ்மல் அமீர் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2012, நவம்பரில் புனேவில் உள்ள எர்வாடா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். இதனிடையே, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 2011 ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், `மும்பை தாக்குதலின் திட்டமிடல், தயாரிப்பு, செயல்படுத்துதல் ஆகியவற்றில் சஜித் மிர்க்கு உள்ள தொடர்பு, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது, நிதி உதவி அளித்தல், பொது இடங்களில் குண்டு வைத்தல், அமெரிக்க குடிமக்களை கொல்வதற்கு உதவியது, தூண்டியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். மும்பை தீவிரவாத தாக்குதலின் போது, இவனது உத்தரவின் பேரிலேயே, தீ வைத்தல், கையெறி குண்டுகள் வீசியது, பணய கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டது நடந்துள்ளது,’’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ``இதையடுத்து அவனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவனது பெயர் எப்பிஐ.யின் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்தது. மேலும், கடந்த 2012ல் சஜித் மிர் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்து வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பாவை அமெரிக்க உள்துறை, கடந்த 2001 டிசம்பரில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்தது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பை தாக்குதல் நடந்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், அவனை கைது செய்யவோ அல்லது தண்டனை பெற்று தரவோ, அவனை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ. 37 கோடி சன்மானம் வழங்கப்படும், என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மூலக்கதை