ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி

தினமலர்  தினமலர்
ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி

மதுரை : 'வங்கிகளில், 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு முன், வழக்கறிஞர் சங்கர் முரளி ஆஜராகி, முறையிட்டதாவது: பெரம்பலுாரைச் சேர்ந்த ஜெயராஜ், திருச்சியில் ஒரு வங்கியில் வீட்டுக் கடன், 15 லட்சம், மற்றொரு கடன், 50 லட்சம் ரூபாய் வாங்கினார். இதற்கு ஈடாக, அவரது விவசாய நிலம், அடமானமாக பெறப்பட்டது.

இதில், வீட்டுக் கடனுக்கு, 18 லட்சம், மற்ற கடனுக்கு, 25 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. சில காரணங்களால், மேலும் கடனை செலுத்த முடியவில்லை. இரு கடனுக்கும் அசல், வட்டி, 4 கோடி ரூபாய் செலுத்துமாறு வங்கி தரப்பு தெரிவித்தது. கடனுக்கு ஈடாக, விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில், ஒரு நிறுவனம் மூலம் வங்கி ஈடுபட்டது. இதற்கு எதிராக ஜெயராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து, வங்கியில், 75 லட்சம் ரூபாய், ஜெயராஜ் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 75 லட்சத்திற்கான, 'டிடி'யை, வங்கியில் செலுத்த ஜெயராஜ் சென்றார். அதை வாங்க மறுத்த வங்கி தலைமை மேலாளர் துாக்கி வீசினார். இவ்விவகாரத்தில், தகுந்த நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வங்கி தரப்பில், 'இது தவறான தகவல்' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது: கடனை வசூலிக்க ஏஜன்சிகளை வைத்து, கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்கின்றனர். இதனால், பலர் தற்கொலையை நாடுகின்றனர். கடனுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. கடன் வசூலிப்பதை, தனியார் ஏஜன்சிகளிடம் ஒப்படைக்க, எதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கி அனுமதி வழங்குகிறது.

'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது. 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஆனால், ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர். விதிமுறைகளை பின்பற்றி, கடனை வசூலிக்க வேண்டும். நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோர வேண்டும். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர்களைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு பதில், கடன் வழங்குவதை தவிர்க்கலாம். இவ்வாறு நீதிபதிகள், அதிருப்தியை வெளியிட்டனர்.

பின், நீதிபதிகள், 'வங்கியின் தலைமை மேலாளர் மஞ்சுளா டிச., 1ல் ஆஜராக வேண்டும். அவர், 'டிடி'யை வாங்க மறுத்தது தொடர்பாக, வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

மூலக்கதை