சிறையில் இருந்தபடி லாலு குதிரை பேரம் நடத்தினாரா? விசாரணைக்கு உத்தரவு

தினமலர்  தினமலர்
சிறையில் இருந்தபடி லாலு குதிரை பேரம் நடத்தினாரா? விசாரணைக்கு உத்தரவு

ராஞ்சி :சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ., - எம்.எல்.ஏ.,விடம், தொலைபேசி வாயிலாக குதிரை பேரத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தும்படி, ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடக்கிறது.அண்டை மாநிலமான பீஹார் சட்டசபைக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சட்டசபை சபாநாயகர் தேர்தல், நேற்று முன் தினம் நடந்தது. இதில், பா.ஜ.,வை சேர்ந்த், விஜய்குமார் சின்ஹா வெற்றி பெற்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆவாத் பீஹாரி சவுத்ரி தோல்வி அடைந்தார்.சபாநாயகர் தேர்தலுக்கு முந்தைய தினம், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ., - எம்.எல்.ஏ., லாலன் பஸ்வானை, 'மொபைல் போனில்' அழைத்து, சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கும்படியும், இந்த ஆட்சியை கலைத்த பின், அமைச்சர் பதவி தருவதாகவும் கூறும், 'ஆடியோ' வெளியாகி,
சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், ஜார்க்கண்ட்டில் உள்ள, பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நல கோளாறு காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள, ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தொலைபேசி வாயிலாக குதிரை பேரத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, ராஞ்சி துணை கமிஷனர், எஸ்.பி., மற்றும் சிறைத்துறை எஸ்.பி., ஆகியோருக்கு, ஜார்க்கண்ட் டி.ஜி.பி., வீரேந்திரா பூஷண் உத்தரவிட்டு உள்ளார்.
சிறை விதிமுறைகளை, லாலு பிரசாத் அடிக்கடி மீறுவதாக குற்றச்சாட்டு எழுவதை தொடர்ந்து, இந்த வழக்கை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என, பொது நல மனு தாக்கல் செய்யப்பட
உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி மாற்றம்

இதற்கிடையே, ரிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பங்களாவில் இருந்த லாலு, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக, அங்குள்ள வார்டுக்கு, நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார்.

மூலக்கதை