கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் நாளை முதல்வர்களுடன் ஆலோசனை: தொற்று வேகமாக பரவுவதால் மீண்டும் ஊரடங்கா?
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தற்போது சில மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக இருந்த போதிலும், சில மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. அதனால், பரவலை கட்டுப்படுத்த குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தொற்று பாதிப்பு 91 லட்சத்தை கடந்தும், பலி எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தும் உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 93. 69 சதவீதமாகஉள்ளது.
தொற்றுநோயால் இறந்தவர்களின் விகிதம் 1. 46 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பை பொறுத்தமட்டில் இந்தியாவில் மட்டும் ஐந்து தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் நான்கு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளன. அதனால், அடுத்தாண்டு துவக்கத்தில் தடுப்பூசி வினியோகம் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை பலமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி நாளை மாநில, யூனியன் பிரதேச முதல்வர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுப் பிரதிநிதிகளிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதில் கொரோனா பரவலின் தற்போதைய நிலை, தடுப்பூசி விநியோகம் மற்றும் பொருளாதார மீட்பு குறித்து முதல்வர்களுடன் ஆய்வு செய்வார்.
பிரதமர் அலுவலக ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, கொரோனா நோய்த்தொற்றுகள் வேகமாக பரவிவரும் எட்டு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முதற்கட்டமாக நாளை (நவ.
24) ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ெதாடர்ந்து நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் தடுப்பூசி வழங்குவதற்கான உத்தி குறித்து விவாதிக்க உள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், நாளைய ஆலோசனையில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், குளிர்கால சீசன், துர்கா பூஜை, தீபாவளி போன்ற திருவிழாக்களுக்கு பிந்தைய மக்களின் வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் கொரோனா தொற்று பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதனால், அங்கெல்லாம் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் மேற்கொள்ள இருக்கும் ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக சில நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திறந்துவிட்டால் பொறுப்பேற்பீர்களா?
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சி வாயிலாக ஆற்றிய உரையில், ‘கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து உள்ளது. போதுமான சுகாதார வசதிகள் நம்மிடம் உள்ளன.
மகாராஷ்டிராவில் 12 கோடி மக்கள் உள்ளனர். தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.
அதுவரை மக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். கொரோனாவின் நெருக்கடியில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது.
இதைத் திறந்து விடுங்கள், அதைத் திறந்துவிடுங்கள் என்று சொல்பவர்கள் பொறுப்பேற்பீர்களா? சிலர் எனக்கு இரவு ஊரடங்கு உத்தரவை பரிந்துரைக்கிறார்கள்’என்றார். தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், ‘தீபாவளியின்போது, மக்கள் கூட்டமாக சந்தைகளில் கூடியதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
அடுத்த 8 முதல் 10 நாட்களில் நிலைமை மறுஆய்வு செய்யப்படும்.
பின்னர் ஊரடங்கு தொடர்பாக முடிவு எடுக்கப்படும்’என்றார்.
.