நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா?... ஓம் பிர்லா தகவல்
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடத்தப்படுவது வழக்கம். தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் தொடருடன் சேர்த்து குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டது.இது தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தலைமைச் செயலகம் தயாராக உள்ளது. இதுபற்றி நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து, கூட்டத்தொடருக்கான தேதியை அமைச்சரவை அறிவிக்கும்’’ என்றார்.