ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?

தினமலர்  தினமலர்
ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?

சென்னை:''அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தி.மு.க.,வுக்கு, ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?'' என, சென்னையில் நேற்று நடந்த விழாவில் கேள்வி எழுப்பிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''வரும் சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள், குடும்ப கட்சிகளையும், வாரிசு, ஜாதி அரசியலையும் ஒழித்து, சரியான பாடம் புகட்டுவர்,'' என்றார்.
தமிழக அரசின், 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில், நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அமித்ஷா பேசியதாவது:நீண்ட இடைவெளிக்கு பின், தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். உங்கள் மத்தியில், சில அரசியல் கருத்துகளையும் பேச விரும்புகிறேன்.

முற்றுப்புள்ளி



பிரதமர் மோடி ஆட்சி, மத்தியில் வந்த பின், நாடு முழுதும் ஜனநாயக ஆட்சி பரவி வருகிறது. ஊழல் செய்யும் மற்றும் குடும்ப ஆட்சிகள் துாக்கி எறியப்படுகின்றன. பல மாநிலங்களில் குடும்ப ஆட்சிகளாலும், ஜாதிய கட்சிகளாலும், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை ஒழிக்க, பிரதமர் மோடி அரசு, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவற்றுக்கு, ஒவ்வொரு மாநிலமாக முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநில தேர்தலிலும், குடும்ப கட்சிகளுக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுகின்றனர். தமிழகத்திலும், வரும் சட்டசபை தேர்தலில், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.நாடு முழுதும் ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கட்சிகளே, பெரும் வெற்றி பெறும். தமிழக மக்களும் அதை செய்து காட்டுவர்.எங்களைப் பார்த்து, ஊழல் செய்வதாகவும், அநீதி இழைப்பதாகவும், தி.மு.க., பேசுவதை பார்த்து, ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் கட்சியையும், குடும்பத்தையும், அவர்களது ஆட்சியின் பின்னணியையும் திரும்பி பார்க்க வேண்டும்.


'2 ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது, தி.மு.க., என்பதை மறந்து விடக் கூடாது. அக்கட்சிக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?மோடி ஆட்சி வந்த பின், எங்காவது தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு என்று, பிரச்னை ஏற்பட்டுள்ளதா; இலங்கை தமிழர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதா? பிரதமர் மோடி, இலங்கையின் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள, 50 லட்சம் தமிழர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
பயங்கரவாதிகளின் சதி செயல்கள் முறியடிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வெளிநாடுகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் உள்ள வீரர்கள், தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களின் தியாகங்களுக்கு, நான் தலைவணங்குகிறேன். உலகில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, நம் நாடும் முன்னிலை இடத்தை பெறும் என்று, உறுதியளிக்கிறேன்.

தி.மு.க.,வுக்கு சவால்


தொழில் துறை ஆகட்டும், மக்களுக்கான நலத் திட்டங்கள் ஆகட்டும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு, மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சிக்கு தோளோடு தோள் நின்று, மத்திய அரசு உதவி வருகிறது. இந்த உதவிகள், எப்போதும் தொடரும்.இங்கே உள்ள தி.மு.க.,வினரிடமும், அவர்கள் கூட்டணி வைத்த காங்கிரசாரிடமும் கேளுங்கள். அவர்களின் கூட்டணி ஆட்சியில், தமிழகத்துக்கு என்ன செய்தனர் என, கேளுங்கள். எங்களது திட்டங்களை பற்றி, நாங்கள் பட்டியல் தர தயார். அவர்களின் திட்டங்களில், ஒன்றாவது சொல்ல முடியுமா? இவ்வாறு, அமித்ஷா பேசினார்.

'தமிழக வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்!



''தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு, பிரதமர் மோடி அரசு தோளோடு தோள் நின்று உதவும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார். அவர் மேலும் பேசியதாவது:
மிகவும் பழமையான, சிறப்புமிக்க மொழியான, தமிழில் பேசுவதற்கு விருப்பம் இருந்தாலும், தமிழ் மொழியில் பேச இயலாததற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்களிடம், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.உலகிலேயே மிகவும் பழமையான, தொன்மையான சிறந்த கலாச்சாரமும், பண்பாடும், அறிவியல் பங்களிப்பும் உடையது தமிழும், தமிழ்நாடும். இந்திய சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தின் பங்கு அளப்பரியது; அந்த தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன்.

இ.பி.எஸ்.,க்கு பாராட்டு



இங்கே பல திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. பல திட்டங்களின் பணிகள் நிறைவு பெற்று திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முதல்வர்களாக இருந்த, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் சீர்மிகு திட்டங்களை, முதல்வர் இ.பி.எஸ்., சிறப்பாக செயல்படுத்துகிறார். அந்த பணிகளை, இன்னும் தொடர்வார் என, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து, உலகமே போராடுகிறது. இந்த போரில், இந்தியா பெரும் வெற்றி பெற்றுள்ளது.
வளர்ந்த நாடுகள் வியக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், கொரோனா ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 130 கோடி மக்களும் இணைந்து, இந்த போரில் வெற்றி பெற்றுள்ளனர்.முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமையிலான நிர்வாகத்தில், கொரோனா ஒழிப்பு பணி, மிக சிறப்பாக நடந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகமாக உள்ளது.

தமிழகம் முன்னோடி


கொரோனா தொற்று ஒழிப்பு பணியில், தமிழகத்தில் இருந்து தான், எங்கள் துறைக்கு மிகவும் அறிவியல் ரீதியான தகவல்கள் உரிய நேரத்தில் தரப்பட்டுள்ளன. கர்ப்பிணியர் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான தொற்று பரவல் தடுப்பில், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாகத்தில், நல்லாட்சி தரும் அரசாக, தமிழகம் முன்னணியில் உள்ளது.நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மையில், தேசிய அளவில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்திய அளவில், மாவட்டங்களுக்கு இடையிலான நிர்வாக போட்டியில், வேலுார் மற்றும் கரூர் மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

மத்திய அரசின் திட்டம்



மத்திய அரசை பொறுத்தவரை, ஏழை பெண்களின் குடும்பங்களுக்கு, எரிவாயு இணைப்பு வழங்குவதில், 13 கோடி குடும்பங்களுக்கு உதவியுள்ளது. கழிப்பறை ஏற்படுத்தும் திட்டம், சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்ற திட்டங்கள், சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.குடிநீர் வழங்குவதற்கான, 'ஜல் ஜீவன்' திட்ட செயல்பாட்டில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அனைவருக்கும் வீடு திட்டம், நாடு முழுதும் வரும், 2022க்குள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்.விவசாயிகளின் வங்கி கணக்கில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளில், 95 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

காங்., பொய் பிரசாரம்



ஆனால், விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக, காங்கிரசார் பொய் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள், 10 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தனர் என்பதை, சொல்ல முடியுமா? தமிழகத்தில், 45 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 4,400 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. நீல புரட்சி திட்டத்தில், பல்வேறு நிதியுதவி வழங்குவதால், தமிழகம் தற்போதுள்ள, நான்காம் இடத்தில் இருந்து, முதல் இடத்துக்கு விரைவில் வரும் நிலை உள்ளது.
தமிழகத்தில், 15 சதவீத கிராமங்களில், துாய்மையான குடிநீர் சரியாக கிடைக்காமல் உள்ளது. 2024ம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களுக்கும் துாய்மையான குடிநீர் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும்.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, எப்படி செயல்படுகிறது என்பது, தமிழக மக்களுக்கு தெரியும். நாட்டில் இரண்டு இடங்களில் தான், பாதுகாப்பு தொழில் தடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்திலும், தமிழகத்திலும் அவை அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு உதவி


சாகர்மாலா திட்டத்தில், 2.25 லட்சம் கோடி ரூபாய், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 1.35 லட்சம் கோடி ரூபாய் துறைமுக மேம்பாட்டுக்கும், மீதி, சாலை மேம்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.உலகம் போற்றும் விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை- - மதுரை இடையில், தேஜஸ் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் மட்டும், நேரடி மானிய திட்டத்தில், மக்களின் வங்கி கணக்கில், 4,300 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். 1.08 கோடி கிலோ உணவு தானியங்கள், தமிழகத்துக்கு வழங்கியுள்ளோம்.மேலும், 3.36 கோடி கிலோ பருப்பு வழங்கியுள்ளோம். 1.38 கோடி பெண்களுக்கு, அவர்களின் ஜன்தன் வங்கி கணக்கில், 917 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமித்ஷா பேசினார்.

மூலக்கதை