தொடர் சாதனையில் அன்னிய செலாவணி

தினமலர்  தினமலர்
தொடர் சாதனையில் அன்னிய செலாவணி

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.

கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 57 ஆயிரத்து, 277 கோடி டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய சாதனை உயரத்தை
தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 42.38 லட்சம் கோடி ரூபாய்.சமீப காலமாகவே தொடர்ந்து அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.


இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 31 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் அதிகரித்து, 42.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, ஒரு புதிய சாதனை அளவாகும்.
கடந்த, 6ம் தேதியுடன் முடிவடைந்த, இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 57 ஆயிரத்து, 572 கோடி ரூபாய் அதிகரித்து, 42.07 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் இருப்பு மதிப்பு, 553 கோடி டாலர் அதிகரித்து, 53 ஆயிரத்து, 27 கோடி டாலராக உள்ளது. ஆனால், மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 123 கோடி டாலர் சரிந்து, 3,635 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.69 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை