சபரிமலையில் பக்தர்கள் திரும்புவதை உறுதி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு ஒவ்வொரு நாளும் வரும் கடைசி பக்தரும் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறாரா என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. பக்தர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2,000 பேரும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. காலை 5 முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் ெசய்யலாம். இதனால் தினமும் அதிகாலை 3 மணிக்கு பின்னரே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோல இரவு 7 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில் இரவு 7 மணிக்கு பம்பையில் இருந்து புறப்படும் கடைசி பக்தரும் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறாரா என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ேகமரா பதிவுகளை பார்த்து, கடைசி பக்தரும் தரிசனம் முடித்து திரும்பி விட்டாரா என்பதை போலீசார் உறுதி செய்வர்.