நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்; சிபிஎஸ்இ செயலாளர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்; சிபிஎஸ்இ செயலாளர் தகவல்

புதுடெல்லி: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடக்கும் என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 23ம் ேததி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

நடத்தப்படாமல் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாநிலங்களில் தொற்று பரவல் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி, மார்ச் மாதம் வாக்கில் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த தேர்வுகளை ரத்து செய்தல் அல்லது மே மாதம் வாக்கில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘புதிய கல்விக்கொள்கை - பள்ளிக்கல்வியின் பிரகாசமான எதிர்காலம்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில், சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி பேசுகையில், ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும். தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து விரிவான திட்டத்தை வகுத்து வருகிறோம். விரைவில் அதனை அறிவிப்போம்’ என்றார்.

ஆனால், வழக்கம்போல் நேரடி தேர்வாக பிப்ரவரி - மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்குமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது பற்றி சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை