பாக்., கோரிக்கையை ஏற்காமல் பிரான்ஸ் மூக்குடைப்பு!

தினமலர்  தினமலர்
பாக்., கோரிக்கையை ஏற்காமல் பிரான்ஸ் மூக்குடைப்பு!

பாரிஸ் :'மிராஜ் ரக ஜெட் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நிராகரித்துவிட்டது.
பிரான்சிடமிருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐந்து விமானங்கள், ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், அவை, விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

கேலிச் சித்திரம்



இதனால், இந்திய விமானப் படையின் பலம் அதிகரித்துள்ளது; இது, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, தன் ராணுவத்தையும் மேம்படுத்த, பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையில், 'மிராஜ்' ரக ஜெட் விமானங்கள், 150க்கும் அதிகமாக உள்ளன. இந்த விமானங்களை, பிரான்சிடமிருந்து தான், பாகிஸ்தான் வாங்கியது. தற்போது இந்த விமானங்களில் பெரும்பாலானவை, நல்ல நிலையில் இல்லை. அதேபோல், பாகிஸ்தானிடம் உள்ள மூன்று, 'அகோஸ்டா - 90 பி' ரக நீர்மூழ்கி கப்பல்களின் நிலையும் சிறப்பாக இல்லை.

'விமானப்படை தளம், மிராஜ் ரக விமானங்கள், அகோஸ்டா நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்' என, பிரான்சிடம், பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதுபற்றி பரிசீலிப்பதாக, பிரான்ஸ் தெரிவித்திருந்தது.இதற்கிடையே, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல், ஒரு பத்திரிகையில் வெளியான மதம் தொடர்பான ஒரு கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டினார்.

அதிர்ச்சி



சில நாட்கள் கழித்து, பள்ளி அருகிலேயே சாமுவேலை, பயங்கரவாதி ஒருவன் கொலை செய்தான்; இது, பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில், 'பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார். பிரான்சில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை' எனக் கூறியிருந்தார்.

இம்ரானின் இந்த விமர்சனம், பிரான்ஸ் அரசியல்வாதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரான்சில், பாகிஸ்தான் மக்கள் குடியேற தடை விதிப்பது பற்றி, பிரான்ஸ் அரசு ஆலோசித்து வருகிறது.பாகிஸ்தானின் உளவு நிறுவனமான, ஐ.எஸ்.ஐ.,யின் முன்னாள் தலைவர் அகமது சுஜா பாஷாவின் உறவினர்கள் உட்பட, 183 பாகிஸ்தானியர்களின், 'விசா்க்களை, பிரான்ஸ் ரத்து செய்து உள்ளது.இந்நிலையில், இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்ளா, சமீபத்தில் பிரான்சுக்கு சென்றார். அதிபர் மேக்ரான் உட்பட பலரை

சந்தித்து பேசினார்.

கோரிக்கை



'பிரான்சுடன், இந்தியா நெருங்கிய நட்புறவு வைத்துள்ளது. ராணுவ ரீதியாகவும், நெருங்கிய நட்புறவு உள்ளது. அதனால், பாகிஸ்தானுக்கு செய்யும் உதவிகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும்' என, பிரான்ஸ் அதிகாரிகளிடம், அவர் விளக்கினார். இந்நிலையில் தான், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானப்படை தளம் ஆகியவற்றை மேம்படுத்த உதவ வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரிக்க, பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது குறித்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மிராஜ் ரக விமானங்கள், அகோஸ்டா நீர்மூழ்கி கப்பல்கள், விமானப்படை தளம் ஆகியவற்றை மேம்படுத்த

உதவ வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க, அதிபர் மேக்ரான் முடிவு செய்துள்ளார்.ரபேல் போர் விமானங்களை, மேற்காசிய நாடான கத்தாரும், பிரான்சிடமிருந்து வாங்கியுள்ளது. இந்த விமானம் தொடர்பான தொழில்நுட்ப பணிகளில், பாகிஸ்தானியர் யாரையும் ஈடுபடுத்த கூடாது என, கத்தாரிடம், பிரான்ஸ் வலியுறுத்தி உள்ளது. ஏனெனில், ராணுவ ரகசியங்களை, சீனாவுடன் பல முறை பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது.

பாகிஸ்தானுடன் ராணுவ உறவை மேம்படுத்த, பிரான்ஸ் விரும்பவில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்திய விமானப்படைக்கு சவால் விடும் வகையில், தங்கள் விமானப்படையை மேம்படுத்த வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் விரும்பினார். ஆனால், அவருக்கு பிரான்ஸ், சரியான மூக்குடைப்பு செய்துவிட்டது. நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த, ஐரோப்பிய நாடான ஜெர்மனியிடம், சமீபத்தில் பாகிஸ்தான் உதவி கேட்டது. ஜெர்மனும், இந்த விஷயத்தில் கைவிரித்து விட்டது.



மூலக்கதை