டி20 உலக கோப்பையில் நடராஜன் விளையாடுவார்...: விவிஎஸ் நம்பிக்கை
இந்திய அணியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக நடராஜன் இருப்பார். அப்போது இந்திய அணிக்காக கடைசி ஓவர்களை வீசும் பணியை அவர் செய்வார். முகமது ஷமி, நவ்தீப் சைனி போல் நம்பிக்கையுடன் கடைசி ஓவர்களை அவர் வீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இடது கை வேகப் பந்துவீச்சாளரான நடராஜன், உலக கோப்பைக்கான அணியில் முக்கிய காரணியாக இருப்பார். எப்போதும் யார்க்கர்களுக்காகவே அடையாளம் காணப்படுபவர். தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்சின் விக்கெட்டை எடுத்த விதமே அதை சொல்லும். அவரிடம் உள்ள பல திறமைகளை ஐபிஎல் தொடரில் முழுமையாக பயன்படுத்தவில்லை. அவர் அச்சுறுத்தும் பவுன்சர், ஆஃப் கட்டர், பந்தை மெதுவாக இறக்குவது என... பன்முகத் திறமைக் கொண்டவர் என்பதுடன் புதிய பந்தைக் கொண்டு விக்கெட் வேட்டை நடத்தக்கூடியவர். அடிப்படையில் நடராஜனுக்கு திடமான மனநிலையும், யார்க்கர்களை கடைசி ஓவரில் வீசும் நம்பிக்கையும் உள்ளது. இதுபோல் தொடர்ந்து யார்க்கர்களை வீசுவது பொதுவாக கடினமானதாகும். சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடினார். இவ்வாறு சன்ரைசர்ஸ் ஆலோசகரும் முன்னாள் நட்சத்திர வீரருமான விவிஎஸ். லஷ்மண் கூறியுள்ளார்.