பிரதமர் மோடி அறிவுறுத்திய ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தெரியாது : மத்திய மின்னணு அமைச்சகம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி அறிவுறுத்திய ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தெரியாது : மத்திய மின்னணு அமைச்சகம்

டெல்லி : ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடியாக பதிலளித்துள்ளது.கொரோனா பரவலை கண்காணிக்க மத்திய அரசு, \'ஆரோக்கிய சேது\' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, நமது ஸ்மார்ட்போனில் இருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது நமக்கு எச்சரிக்கை தரும்.மேலும் அந்த கொரோனா நோயாளி, எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும். இது போன்று பல நன்மைகளை கொண்ட ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அதனை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து Https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டது. இந்த நிலையில் தற்போது அந்த கேள்விகளுக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டது என்பது தெரியாது என தெரிவித்துள்ளது. இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய தகவல் ஆணையம். மேலும் ஆரோக்யா சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இவ்விவாகரம் குறித்து, அடுத்த மாதம் சிபிஓக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை