திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமான நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்கதர்கள் இன்றி நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி ‘கல்கி’ அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இது குறித்து தேவஸ்தான அர்ச்சகர்கள் கூறுகையில், ‘வரலாற்றில் முதன் முறையாக 2 பிரமோற்சவங்களும் வீதியுலா இன்றியும், தெப்பக்குளத்தில்  தீர்த்தவாரி நடத்தாமலும், பக்தர்களின்றியும் நடந்து முடிந்தது. விரைவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து, அடுத்த  பிரமோற்சவத்தின்போது பாரம்பரிய கோலாகலத்துடன் கொண்டாட சுவாமி அருள் புரிய வேண்டும்’ என தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும். திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மூலக்கதை