விதிமுறைகளை மீறி தாடி வளர்த்த உத்தரபிரதேச எஸ்ஐ சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
விதிமுறைகளை மீறி தாடி வளர்த்த உத்தரபிரதேச எஸ்ஐ சஸ்பெண்ட்

லக்னோ, :உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் ரமலா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் இன்தஸார் அலி (50). இவர் சுமார் 6 அங்குல நீளத்தில் தாடி வளர்த்து வைத்திருக்கிறார். விதிமுறைபடி அனுமதி பெறாமலே நீண்ட தாடி வளர்த்தமைக்காக இன்தஸார் அலியை பணியிடை நீக்கம் செய்து பாக்பத் மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாக்பத் மாவட்ட எஸ்பி அபிஷேக் சிங் கூறுகையில், ‘இந்த விஷயத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு, நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சீருடை அணிவதிலும் எஸ்ஐ இன்தஸார் ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளார். இரண்டு முறை அளித்த எச்சரிக்கையையும் அவர் மீறியுள்ளார். மாநிலக் காவல்துறையின் ஒழுங்கு விதிகளின்படி சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வளர்க்கும் அனுமதி உள்ளது. மற்ற மதத்தினர் தாடி வளர்ப்பதற்கானக் காரணத்தை தம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். நவ. 2019ல் இன்தஸார் அலி, தான் தாடி வளர்க்க அனுமதி கோரி ஐ.ஜி-க்கு அனுமதி அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இன்னும் அனுமதி பெறப்படவில்லை என்றும் கூறுகிறார். காவல்துறையில் ஒழுக்கத்தைப் பின்பற்றுவது அனைவருக்கும் முக்கியம். இதனை, எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தப்படக்கூடாது’ என்றார்.

மூலக்கதை