முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம் மற்றும் கல்வி ஆகியவை இன்றியமையாதது. மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்கிட மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் போற்றி வணங்குவது நவராத்திரி பண்டிகையின்  சிறப்பாகும்.   செய்யும் தொழிலே தெய்வம் என்று மதித்து, தொழிலின் மேன்மையை போற்றும் வகையில், மக்கள் தங்களது தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மேன்மேலும் தொழில் வளர இறைவனை வேண்டி வழிபட்டு ஆயுத பூஜை திருநாளை கொண்டாடுவார்கள்.



விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் இறைவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்ற நற்காரியங்களை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள். இந்த சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை