7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை

தினகரன்  தினகரன்
7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை

டெல்லி: 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த வருவதால், உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. தொடர்ந்து மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காததால் சட்டம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு ஏதுமில்லை. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்; தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. அதில் சுமார் 3,800 பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்படக்கூடிய பள்ளிகள். இதில் 45% மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், இவர்களின் மருத்துவ படிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும் அவர்களுடைய கனவுகளை நினைவாக்கும் வகையில் தற்போது 7.5% உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என ஒரு சட்டமசோதாவானது நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே உடனடியாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் இந்த ஆண்டே 300 மாணவர்கள் பயனடைவார்கள். என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதேபோல தமிழக அமைச்சர்கால், முதல்வர் உள்ளிட்டோரும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை