ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கு பரூக் அப்துல்லாவிடம் மீண்டும் விசாரணை: அமலாக்கத்துறை 5 மணி நேரம் நடத்தியது
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் 2வது முறையாக, அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 2002 மற்றும் 2011 கால கட்டத்தில், 43.69 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் கடந்த திங்கட்கிழமை அமலாக்கத்துறை விசாரித்தது. இந்நிலையில், நகர் ராஜ்பாக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று அவர், 2வது முறையாக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விவசாரணை நடத்தினர்.இன்னும் எத்தனை காலம்?தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் இம்ரான் நபி தார் கூறுகையில், பரூக்கை மூன்று நாட்களில் மீண்டும் ஆஜராக கூறியிருப்பது, பாஜ.வுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் நடவடிக்கையாகும். இன்னும் எத்தனை காலம் தான் பாஜ.வினர் சிபிஐ, அமலாக்கத்துறை, ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை மிரட்ட போகின்றனர்?,’’ என்று கூறினார்.