தீப்பொறி திருமுகமும்... பொடலங்காவும்!: தோனியை போட்டு தாக்கும் காந்த்
ராஜஸ்தானிடம் தோற்ற பிறகு, நடப்பு சீசனில் தங்களுக்கான வாய்ப்பு அவ்வளவுதான் என்ற விரக்தியான மனநிலையில் பேட்டியளித்த சென்னை கேப்டன் தோனி கூறியதாவது: சில விஷயங்களை முயற்சி செய்தோம். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த சீசனில் நாங்கள் பிளே ஆப் சுற்றில் இல்லை என்றே நினைக்கிறேன். அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. அடுத்த போட்டியில் இருப்போமா மாட்டோமா என்ற பாதுகாப்பற்ற உணர்வுடன் ஓய்வறையில் வீரர்கள் இருப்பதை விரும்பவில்லை. எனவே இருக்கின்ற வீரர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும். சரியாக ஆடாவிட்டால் வேறு ஆட்களை தேர்வு செய்யலாம்.இளம் வீரர்களுக்கு சில வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவர்களிடம் ‘தீப்பொறி’ எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அதனால் அனுபவ வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை சேர்க்கலாம் என்ற முடிவை எடுக்க முடியவில்லை. இந்த தோல்வி எஞ்சியுள்ள போட்டிகளில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. இனி அவர்கள் மீது எந்த அழுத்தமும் இருக்காது. அவர்கள் களத்தில் இறங்கி சுதந்திரமாக தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தலாம்... என்று கூறியுள்ளார்.அவரது இந்த பேட்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே ரசிகர்களே மீம்ஸ் போட்டு தங்கள் அபிமான அணியை, குறிப்பாக கேப்டன் தோனியின் ‘சமாளிபிகேஷனை’ கலாய்த்து வருகின்றனர். அனுபவ வீரர்கள் சரியாக ஆடாவிட்டாலும் அவர்களை தொடர்ந்து ஆட வைத்துள்ளார். அதே சமயம் முரளி விஜய்க்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மற்றொரு அனுபவ வீரரான இம்ரான் தாஹிர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இளம் வீரர்களுக்கும் தோனி சரியாக வாய்ப்பு தரவில்லை. ருதுராஜ் கெய்க்வாடுக்கு 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் கிடைத்த ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடியும் அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார். ‘7.30 மணிக்கு மேல் அவரால் பேட்டிங் செய்வது கடினம்’ என்று புது காரணம் ஒன்றையும் தோனி சொன்னார். இந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் கலக்கிய தமிழக வீரர் சாய் கிஷோருக்கு இன்னும் ஒரு வாய்ப்பை கூட தரவில்லை. இப்படி வாய்ப்பே கிடைக்காமல் பலர் இருக்கின்றனர்.காவிரி பிரச்னை தொடர்பாக 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால் அந்த ஆண்டு போட்டி பூனாவுக்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு தருவதில் தோனி ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வாய்ப்பளிக்காமலே ‘தீப்பொறி திருமுகம்’ போல் காமெடியாக பேசியிருக்கிறார் தோனி. பேட்டி முடிந்ததும், வர்ணனையின் போதே அதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி காந்த், ‘தோனி பிராசஸ்... பிராசஸ் என்று சொல்வதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் சொல்லும் பொடலங்கா கதையையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. செயல்முறை பற்றி பேசும் நீங்கள் செய்யும் வீரர்கள் தேர்வு மகா சொதப்பலாக இருக்கிறது. இளைஞர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேட்டால் ஸ்பார்க் இல்லை என்கிறீர்கள். ஜெகதீசனிடம் தீப்பொறி இல்லையா. அவரிடம் இல்லாத ஸ்பார்க் ஜாதவிடம் இருக்கிறதா? இல்லை சாவ்லாவிடம் இருக்கிறதா? தோனியின் கருத்து தவறானது. இனிமேல் இளைஞர்களுக்கு ஸ்பார்க் இருக்கிறதா பார்ப்போம் என்கிறார். ஜெகதீசன் வாய்ப்பு கிடைத்த ஒரு போட்டியிலும் நன்றாகதானே விளையாடினார். அப்போது ஸ்பார்க் தெரியவில்லையா’ என்று கடுமையாக தாக்கி உள்ளார்.‘டி20 இளைஞர்களுக்கான விளையாட்டு. உலக கோப்பையில் இந்திய அணியை இளம் வீரர் தோனி வழி நடத்தட்டும்’ என்று 2007ல் சச்சின், சேவக், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் பெருந்தன்மையுடன் விலகி வழிவிட்டதையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். தோனியின் அணுகுமுறையில் இனியாவது மாற்றம் இருக்குமா என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.