ஆந்திர முதல்வர் அறிவிப்பு 1 முதல் 8ம் வகுப்புக்கு நவ.2ல் பள்ளிகள் திறப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திர முதல்வர் அறிவிப்பு 1 முதல் 8ம் வகுப்புக்கு நவ.2ல் பள்ளிகள் திறப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி, பாடம் கற்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ெஜகன்மோகன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதில் 1, 3, 5, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு நாள் என்று 2 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கை 750க்கு மேல் இருந்தால் 3 நாட்களுக்கு ஒருமுறை வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிகள் மதியம் வரை மட்டுமே திறந்திருக்கும். மதிய உணவிற்கு பின் மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் செயல்படுத்தப்படும். பிறகு என்ன என்பது குறித்து அப்போது உள்ள நிலைமையை பொறுத்து டிசம்பரில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை