பதவி காலத்தை நீட்டிக்க கோரி அரசுக்கு ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்

தினமலர்  தினமலர்
பதவி காலத்தை நீட்டிக்க கோரி அரசுக்கு ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்


சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை நீட்டிக்க கோரி, அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 15ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் தரப்பட்டது. விசாரணை முடியாததால், அவ்வப்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டது.எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம், இம்மாதம், 24ம் தேதி முடிகிறது.



தற்போது, ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு தடை கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், விசாரணை முடியாமல் உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கோரி, விசாரணை கமிஷன் சார்பில், தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அப்பல்லோ மருத்துவமனையின் மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞர்கள், வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனு, நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனு போன்றவற்றை, உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை. விசாரணை தாமதமாவதை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

எனவே, அரசு வழக்கறிஞர்களுக்கு, அரசு உரிய அறிவுரைகளை வழங்கி, வழக்கை விரைவாக விசாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசாரணை கமிஷனின், கடிதத்தில் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை