நண்பர்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மோடி பிஸி: ராகுல் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நண்பர்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மோடி பிஸி: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘மோடி தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதில் பிஸியாக இருப்பதுதான் நாடு பட்டினியில் தவிப்பதற்குக் காரணம்,’ என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார். ‘உலக பட்டின குறியீடு’ என்கிற அமைப்பு, உலகளவில் பட்டினியால் தவித்து வரும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள 107 நாடுகளில் இந்தியா 94ம் இடத்தில் உள்ளது. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பட்டினியால் தவிக்கும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா 94ம் இடத்தில் உள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம். தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மோடி பிஸியாக இருக்கிறார். அதனால்தான், பட்டினியால் தவிக்கும் ஏழைகள் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது,’ என கூறியுள்ளார். இத்துடன் நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கியிருப்பது பற்றிய வரைபட விளக்கத்தையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை