மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி

பாட்னா: பீகார் தேர்தலில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போடுவதில் ஏற்பட்ட சர்ச்சையில், முதல்வர் நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார். பீகார் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தலைவர்களின் வார்த்தைப் போரும் தீவிரமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே நடந்து வரும் தகராறில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘நான் பிரதமர் மோடியின் அனுமன் (ராமாயண கதாபாத்திரித்தில் ராமருக்கு துணையாக இருந்தவர் அனுமர்).

நான் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எங்கும் பயன்படுத்தி விடக் கூடாது என்று முதல்வர் நிதிஷ்குமார் கவலைபடுகிறார்.

பிரதமர் மோடி என் இதயத்தில் வாழ்கிறார்.

என் மார்பைக் கிழித்து பாருங்கள் நான் மோடியுடன் இருப்பேன். எங்கள் வேட்பாளர்களில் யார் பிரதமரின் புகைப்படத்தைப் பயன்படுத்தினார்கள்? பிரதமர் மோடியை நான் அவமதித்தோ, எதிர்த்தோ இருந்தால், அவரது புகைப்படத்தை வைக்க தேவையில்லை.

எங்களது லோக் ஜனசக்தி கட்சி ஒரு 20 ஆண்டுகால கட்சி. எங்களது கட்சிக்கு என்று ஏன் அதன் சொந்த கருத்தும் இருக்க கூடாது? நாங்கள் தனித்து போட்டியிடுவதால், அவருக்கு (நிதிஷ்குமார்) இழப்பு ஏற்படும் என்று முதல்வர் வருத்தப்படுகிறார்’ என்றார்.



இதுகுறித்து மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், ‘லோக் ஜானசக்தி கட்சியின் தலைவர் சிராக் கூறுவது பொய்யானது. பாஜகவுக்கும் லோக்ஜனசக்திக்கும் தொகுதி உடன்பாட்டில் பிரச்னை இருந்தது.

பாஜக அளிக்கும் இடங்களை காட்டிலும் அதிக இடங்களை லோக் ஜனசக்தி கோரியது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகள் முறிந்தது.

தற்ேபாது லோக் ஜனசக்தி கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்து போட்டியிடுகிறது.

பீகாரில் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாத கட்சி, இன்று அரசு அமைப்பதாகக் கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.

.

மூலக்கதை