அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிதி தேவையில்லை; துணைவேந்தர் கடிதம் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்டன போராட்டம்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிதி தேவையில்லை; துணைவேந்தர் கடிதம் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்டன போராட்டம்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ. 1500 கோடி நிதி திரட்டிக்கொள்ள முடியும்.   மாநில அரசின் நிதி பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும்  முடியும். ஆகவே  உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்’’ என்று, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள், தமிழக உயர்கல்வி வளர்ச்சியில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை தரும்.

அதிமுக அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து, கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில் ஒரு துணைவேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்? முதல்வர் பழனிசாமி ரகசியமாக கொடுத்த ‘அனுமதி’ காரணமா? என்ற சந்தேகம் எழுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘உயர் சிறப்பு அந்தஸ்து’ என்று கூறிவிட்டு, மாநில அரசும் நிதியளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத்தையும் அதிகாரப்பூர்வமாக அளிக்க மத்திய பாஜக அரசு இன்றுவரை மறுத்து வருகிறது.



 மாநில நிதி நிலைமை, மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை போன்றவற்றில் முடிவு எடுக்கவும் மாநில அரசின் நிதி தேவையில்லை, பல்கலைக்கழகமே அந்த நிதியை திரட்டிக் கொள்ளும் என்றும் மிக முக்கியமான முடிவுகளை எடுத்து,  துணைவேந்தர் மத்திய பாஜ அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் என்ன மாநிலத்திற்கு இன்னொரு முதல்வர்  போல் செயல்படுகிறாரா? துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நேரத்தில், தமிழகத்திற்கும் மாணவர்களுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணாவின் புகழ் பெயருக்கும், இப்படியொரு துரோகத்தை செய்ய அவருக்கு எப்படி தைரியம் வந்தது?

தமிழகத்தில் நிலவும் இடஒதுக்கீட்டின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் செயலில் ஒரு துணைவேந்தர் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு,  துணைவேந்தரின் அதிகார அத்துமீறலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா பல்கலைக்கழகம், தன்னிச்சையாக எப்படி நிதி திரட்டும்? அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும்.

அப்படியொரு அபாயத்தை, போகிற போக்கில் திட்டமிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக்கியிருக்கிறார் என்றால், கல்வியைக் காவிமயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?

உலகம் முழுவதும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள  துணைவேந்தர், தமிழ்நாட்டிற்கு விரோதமாகசெயல்படுவதை எப்படி வேந்தராக இருக்கும் ஆளுநர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் புரியாத மர்மமாக இருக்கிறது. துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை ஏதோ அது தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக கருதவில்லை.

துணைவேந்தர், முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆகியோர் கூட்டணியாக, எப்படியாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வியை, காவி மயமாக்கிட செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி நடவடிக்கையாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது.

குறிப்பாக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் எல்லாம் ‘நீட் சட்டம்’ குறித்து பேசப் போகிறோம் என்று கூறிவிட்டு ராஜ்பவனுக்கு சென்று, ஆளுநரை சந்தித்ததில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் இந்த கடிதத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டதா என்பதை முதல்வர் பழனிசாமி  உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

அதிமுக அரசின் தீமை பயக்கும் உள்நோக்கத்தை அறிந்துதான் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் அதிமுக அரசின் முடிவினை சட்டமன்றத்தில் திமுக எதிர்த்தது. ஆகவே, இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதில் முதல்வருக்கு உடந்தை இல்லை எனில்,

இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் மாநில நிதிஉரிமைக்கு விரோதமாகவும் மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை உடனே ‘டிஸ்மிஸ்’  செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும், ‘துணைவேந்தர் எழுதியுள்ள கடிதத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உரிய அதிகாரப்பூர்வமான உத்தரவாதம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றும் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதி, தனது எதிர்ப்பை முதல்வர் பழனிசாமி தெரிவிக்க வேண்டும் என்றும்,

‘உயர்சிறப்பு அந்தஸ்து’க்கு வழிவிடும் துணைவேந்தர் கடிதத்திற்கு துணைபோகும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் நிராகரித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இடஒதுக்கீட்டு கொள்கையை காவு கொடுக்க முயற்சிக்கும் துணைவேந்தர் கடித விவகாரத்தில் அதிமுக அரசு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

.

மூலக்கதை