கொரோனா தொற்று உறுதியான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் ‘அட்மிட்’ அடுத்த 14 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தொற்று உறுதியான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் ‘அட்மிட்’ அடுத்த 14 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள  நிலையில், அவரது வயது மற்றும் அதிக உடல் எடை காரணமாக அவர் அதிதீவிர  கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் (74), அவரது மனைவி மெலானியாவுக்கும் நேற்று கொரோனா உறுதியானது.

அதிபர் டிரம்ப் தற்போது லேசான காய்ச்சலில் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. புகைப்பழக்கம் மற்றும் மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்றாலும், நியூயார்க் நகரவாசியான டிரம்ப் துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்.

சோடா அதிகம் அருந்தும் பழக்கம் கொண்டவர். உடல் பருமன் தொடர்பாக பலமுறை மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்ட டிரம்ப், சமீப காலமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார்.



கடந்த சில நாட்களில் அவரது குரலில் மாறுதல் இருந்ததாகவும், அது கொரோனா பாதிப்பால் ஏற்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல் நிலை மோசமடைந்தால், அவரை தீவிர கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

அதனால், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், அடுத்த சில நாட்கள் அரசுப்பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட படங்களின்படி, அதிபர் டிரம்ப் காரில் ஏறிச் செல்வதையும், அவர் செய்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்படியும் இருந்தது. வரும் நவம்பரில் அந்நாட்டு அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து டிரம்பின் மருத்துவர் சீன் கான்லி வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வெள்ளை மாளிகைக்கு வெளியே டிரம்பின் அனைத்து கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் கடைசியாக நேற்று முன்தினம் பிற்பகல் நியூஜெர்சியில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா ெதாற்று ஏற்பட்டது. அவருக்கு போன்றே டிரம்புக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

திடீரென்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியது. டிரம்பை பொறுத்தமட்டில் அவரது வயது மற்றும் உடல் பருமனே மிகப்பெரிய ஆபத்து காரணமாக மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது.

இதனால், அடுத்த 14 நாட்கள் மிகவும் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை