அமெரிக்கா பள்ளியில் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்கா பள்ளியில் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டால் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகே உள்ள சாண்டா கிளறிட்டா காலிப் என்னும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் குறைந்தது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருப்பதாக செரீப் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்செல்ஸ் தீயணைப்பு படை பிரிவு தெரிவித்துள்ளது. கருப்பு ஆடை அணிந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். பள்ளி அறையில் மாணவர்கள் பதுங்கி கிடந்த நிலையில் பெற்றோர் பெரும் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருந்தனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முதலில் பள்ளியில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் ஒருவழியாக துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை சுட்டு பிடித்துள்ள போலீசார் ஏன் அப்படி செய்தான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சரம் தெரியவரும் நிலையில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மூலக்கதை