தமிழக காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு: அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு: அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்

சென்னை: தமிழக காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் ரூ. 350 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தொழில்நுட்ப துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக காவல் துறைக்கு ரேடியோ, வயர்லஸ் கருவிகள் போன்ற தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து நவீன கருவிகள் வாங்குவதற்கான பணிகளை தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு மேற்கொண்டுவந்தது. புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் பேரில் தமிழக டிஜிபி திரிபாதி, கடந்த செப்டம்பர் 19ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ரூ. 350 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய அதிகாரி உட்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அதிகமான டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 16 மாவட்ட காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் 10 மாவட்டங்களுக்கான டெண்டர் ஒரே நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகுதியுள்ள பல நிறுவனங்கள் டெண்டர் கோரிய நிலையில் காவல் துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அதிக டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த டெண்டர் விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.



இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி உயர் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.

முறைகேடு நடந்த நேரத்தில் தொழில்நுட்பபிரிவு எஸ்பியாக இருந்த அன்புச் செழியன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புச்செழியன் கடந்தவாரம் ராமநாதபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே அன்புச் செழியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், சம்மன் அனுப்பினால் அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்றும் தொழில்நுட்ப பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில் ஏ பிரிவு ஒப்பந்ததாரர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.



எஸ்பி அன்புச் செழியன் 2013ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிவந்துள்ளார். டிஜிட்டல் மொபைல் ேரடியோ சிஸ்டம், சிசிடிவி உள்ளிட்ட தொழில்சாதனங்கள் வாங்குவது தொடர்பான டெண்டர்களை இறுதி செய்யும் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, வாக்கி-டாக்கி வாங்கியதில் ரூ. 88 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதில் ரூ. 350 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்திவருவது காவல் துறை உயர் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை