'பொன் மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை'

தினமலர்  தினமலர்
பொன் மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை

சென்னை : 'இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள், பொன் மாணிக்கவேல் முயற்சியால் மீட்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'சிலை கடத்தல் வழக்குகளில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசு அமல்படுத்தவில்லை' எனக் கூறி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

விசாரணை


இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வாதாடியதாவது:சிலை கடத்தல் வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது; அதுவே, இறுதி உத்தரவு. அந்த உத்தரவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில், அவமதிப்பு வழக்கு தொடர முடியாது; உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணை நடத்தி வரும் பொன் மணிக்கவேல், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி.,யிடம், ஓராண்டாக வழங்கவில்லை.நவம்பர், 30ம் தேதியுடன், பொன் மாணிக்கவேல் பதவிக் காலம் முடிகிறது. அதனால், ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, வரும், 18ம் தேதி, விசாரணைக்கு வர உள்ளது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவர், கூடுதல் டி.ஜி.பி., எனவும், அவரின் கீழ் பணிபுரிபவர்கள், அவருக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொன் மாணிக்கவேல், தன் விசாரணை தொடர்பான எந்த அறிக்கையையும், கூடுதல் டி.ஜி.பி.,-யிடம் தாக்கல் செய்யவில்லை.

பிரதிநிதி

மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக, பொன் மாணிக்கவேல் கூறும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை. யுரேனியம் கொள்முதல் செய்வது தொடர்பான பேச்சின்போது, பிரதமர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள், திரும்ப பெறப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'பொன் மணிக்கவேல் மீட்கவில்லை எனில், சிலைகளை, அவரிடம் ஒப்படைத்தது எப்படி' என, கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து, வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் கூறியதாவது:மாநில அரசின் பிரதிநிதி எனக் கூறி, பொன் மாணிக்கவேல், அந்த சிலைகளை பெற்றுள்ளார். அந்த சிலையை பற்றிய தகவல்கள், அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து, இதுவரை, அவர் தெரிவிக்கவில்லை. தமிழக போலீஸ் துறையில், சிறந்த அதிகாரிகள் இருக்கும்போது, ஒருவரை மட்டுமே சிறந்தவர் என, கூற முடியாது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவை, மீண்டும் புனரமைத்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
இதையடுத்து, வரும், 20ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

மூலக்கதை