மீண்டும் டில்லியில் காற்று மாசு தீவிரம்:அவசர நிலை அறிவிக்க வாய்ப்பு
புதுடில்லி: கடந்த 10 நாட்களுக்கு முன் தலைநகர் டில்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு டில்லி முழுவதும், புகை மண்டலமாக காட்சி அளித்தது. மூச்சு திணறல் பிரச்னையால், பள்ளி செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பலர் முக கவசம் அணிந்தபடி அன்றாட பணிகளை மேற்கொண்டனர். தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், காய்ந்து போன பயிர்களை எரித்ததுமே, இந்த காற்று மாசுக்கு காரணம் என, கூறப்படுகிறது.
காற்று மாசின் தரக்குறியீடு, 0 - 50 புள்ளிகள் வரை இருந்தால், ஆபத்தில்லை என கருதப்படுகிறது. அது, 201 - 400 புள்ளிகள் வரை இருந்தால் மிக மோசமான நிலை என்றும், 500 புள்ளிகளை தாண்டினால் அதிதீவிர அபாய நிலை என்றும் அளவுகோள்கள் உள்ளன.
கடந்த 2-ம் தேதியன்று டில்லியின் காற்று மாசின் தரக்குறீயீடு அளவு, 533 புள்ளிகள் என்ற அதிதீவிர அபாய கட்டத்தை தொட்டது. பின், 480 புள்ளிகளாக குறைந்தது. இதனால், டில்லியில், பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (நவ. 12) மாலை 4 மணியளவில் காற்று மாசு 425 புள்ளிகளாக இருந்தது பின்னர் இரவு 9 மணியளவில் 437 அதிகரித்து, இரவு 10 மணியளவில் 484 புள்ளிகளை தொட்டது. இது 500 புள்ளிகளை தாண்டி அதி தீவிர அபாயமாக மாறும் என்பதால் இன்று அவசரநிலை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.