ஓமனில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சரிந்து விழுந்து விபத்து: 6 இந்திய தொழிலாளர்கள் பலி

தினகரன்  தினகரன்
ஓமனில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சரிந்து விழுந்து விபத்து: 6 இந்திய தொழிலாளர்கள் பலி

மஸ்கட்: ஓமன் நாட்டில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் சீப் என்ற இடத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பூமிக்கு அடியில் 14 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பணியில் இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனையடுத்து பள்ளத்துக்கு மேலே குவிக்கப்பட்ட மண், பள்ளத்துக்குள் சரிந்து விபத்துக்குள்ளானது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உயிருடன் புதைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் எப்படி இறந்தனர் என்ற விவரம் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், உள்ளூர் பத்திரிகைகள், அவர்கள் பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து இறந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, இந்த பரிதாப சம்பவம் குறித்து மஸ்கட் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; மஸ்கட் நகரில் சீப் பகுதியில் கனமழையை தொடர்ந்து, இந்தியர்கள் என கருதப்படும் 6 தொழிலாளர்கள் பலியான தகவல் அறிந்து வேதனை அடைந்தோம். சம்பவம் குறித்த முழு விவரங்களை அறிய ஓமன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். 6 தொழிலாளர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளோம் என கூறியுள்ளது.

மூலக்கதை