காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டார். கடந்த ஜூன் 25 ம் தேதி மசூத் உசேன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக மசூத் உசேன் ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார்.  மசூத் உசேன் வகித்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பதவிக்கு யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது. இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தாமதம் ஆகி வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர தலைவரை நியமிக்க உள்ளதாகவும் விருப்பப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பதவி காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஓய்வுபெற 5 ஆண்டுகள் உள்ள அல்லது 65 வயது வரை உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை கையாண்ட அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். அரசுத் துறைகளில் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை