மண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்

தினமலர்  தினமலர்
மண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்

மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் குழாய் பதிக்கும் பணியின் போது நிகழ்ந்த மண் சரிவில் சிக்கி, 6 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் குடிநீர் குழாய் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், குழாய் பதிக்கும் பணியில் இந்தியர்கள் உட்பட பலர் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், குழியினுள் வேலை செய்து வந்த 6 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். அவர்கள் 6 பேரும் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

இது குறித்து ஓமன் நாட்டின் இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் கடந்த நவ.,10ம் தேதி ஏற்பட்ட கனமழையால், கட்டட பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 6 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகி உள்ளனர் என அறிந்து வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

14 மீட்டர் ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க 12 மணி நேரம் ஆனதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை