வெளிநாடு செல்வதில் தொடர்ந்து தாமதம்: நவாஸ் ஷெரீப் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
வெளிநாடு செல்வதில் தொடர்ந்து தாமதம்: நவாஸ் ஷெரீப் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி வருகின்றது.  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(69). ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும், உடல்நிலை சரியாகவில்லை. இதனால், அவரை வெளிநாடு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  நவாஸ் ஷெரீப் பெயர், வெளிநாடு செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, அவரது பெயரை நீக்கும்படி நவாஸ் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் வெளிநாடு செல்வதற்கு அரசு அனுமதி அளிப்பதாக தெரிவித்திருந்தது. எனவே அவர் ஞாயிறு காலை 9 மணி விமானத்தில் லண்டன் புறப்பட்டு செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தடை பட்டியலில் இருந்து நவாஸ் பெயர் இன்னும் நீக்கப்படவில்லை. மேலும், அவர் வெளிநாடு செல்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்ற தடையில்லா சான்றும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக நவாஸ் உடல்நிலை மோசமாகி உள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசிப் தனது டிவிட்டர் பதிவில், “நவாஸை வெளிநாடு அனுப்புவதற்கான நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும். தாமதம் உடல்நிலையை பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை