கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்ய வேண்டும்: அராஜகத்தின் உச்சம் என ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது மூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்ய வேண்டும்: அராஜகத்தின் உச்சம் என ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மோட்டார் பைக் ஓட்டுனர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில், அந்த பைக்கில் பயணித்த மூதாட்டி காயமடைந்து சாலையில்  விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் அப்பாவி பெண் மீது காவலர்கள் நடத்திய அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகம்காத்தான் காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர், அவரது தாயார் அய்யம்மாள் என்பருடன் நேற்று மோட்டார் பைக்கில்  கள்ளக்குறிச்சிக்கு  பயணித்துள்ளார். கள்ளக்குறிச்சி மிளகாய்த் தோட்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செந்தில் வந்த பைக்கை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது, அவர் பைக்கை நிறுத்த தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் தப்பித்து செல்வதாக நினைத்த சந்தோஷ் என்ற காவலர், தமது கையில் இருந்த லத்தியால் செந்திலை ஓங்கி தாக்கியுள்ளார். லத்தி அடியிலிருந்து தப்பிப்பதற்காக செந்தில் தலையை குனிந்து கொள்ள, அந்த லத்தி அடி செந்திலின் தாயார் அய்யம்மாள் மீது விழுந்துள்ளது.

அதனால் காயமடைந்து சாலையில் விழுந்த அய்யம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உயிருக்குப் போராடிய அய்யம்மாள் அங்கேயே உயிரிழந்தார்.

காவல் துறையினரின் அத்துமீறலால் அப்பாவி மூதாட்டி உயிரிழந்து விட்ட நிலையில், மனசாட்சியே இல்லாமல் காவலர்கள் செய்த அடுத்தக்கட்ட நடவடிக்கை தான் மிகவும் கொடூரமானது.

தங்கள் மீதான கொலைப்பழியிலிருந்து தப்பிப்பதற்காக இளைஞர் செந்தில் மது அருந்தி விட்டு பைக்கை ஓட்டி வந்ததாகவும், போதையில் தமது தாயை வாகனத்திலிருந்து தள்ளி விட்டதால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் பொய்யான வழக்கை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் இந்த செயல் எந்த வகையிலும் மன்னிக்க முடியாதது. இது கொலைக்குற்றத்திற்கு சமமான செயல் ஆகும்.

வாகன தணிக்கையின் போது முரட்டுத்தனமாக வாகனங்களை தடுத்து நிறுத்தவும், ஊர்தி ஓட்டிகளை லத்தி கொண்டு தாக்கவும் காவல்துறையினருக்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுத்தது என்பது தெரியவில்லை. வாகன தணிக்கை என்ற பெயரில் சாலையின் குறுக்கே நின்று கொண்டு வாகனங்களை மறிப்பதும், எதிர்பாராத இத்தகைய செயல்களால் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து சாலையில் விழுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

வாகன சோதனையின் போது ஒரு வாகனம் நிற்காமல் சென்றால் கூட, அந்த வாகனத்தின் பதிவெண்ணை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அத்துமீறுதல் கூடாது.

கள்ளக்குறிச்சியில் அத்துமீறி தாக்கி, மூதாட்டியின் சாவுக்கு காரணமாக இருந்த காவலர்கள், அம்மூதாட்டியின் மகன் மீதே பழி சுமத்தி வழக்கு பதிவு செய்வது அராஜகத்தின் உச்சமாகும். மூதாட்டி அய்யம்மாளின் இறப்புக்கு காரணமான காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 304வது பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்.

உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.

மூலக்கதை