உல்லாசத்தின் போது செல்போன் கால்கள் வந்ததால் எரிச்சல்: இளம்பெண்ணைக் கொன்று உடல் எரிப்பு: லோடு ஆட்டோ டிரைவர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
உல்லாசத்தின் போது செல்போன் கால்கள் வந்ததால் எரிச்சல்: இளம்பெண்ணைக் கொன்று உடல் எரிப்பு: லோடு ஆட்டோ டிரைவர் கைது

தூத்துக்குடி: உல்லாசத்தின்போது அடிக்கடி செல்போன் வந்ததால் இளம்பெண்ணை கொன்று உடலை எரித்து விட்டு தப்பிய லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி விவேகானந்த நகர் பகுதியில் ஹவுசிங் போர்டு உள்ளது.

நேற்று முன்தினம் இங்குள்ள ஒரு வீட்டிற்கு  ஒரு தம்பதி வாடகைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து உடல் எரிந்த துர்நாற்றம் வீசியது.

தகவலறிந்த தாளமுத்துநகர் போலீசார் அங்கு வந்து, உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது ஒரு இளம்பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்தார்.

கை, கால்களில் வெட்டு காயமும் இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இறந்த பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கவிதா(30).

கணவரைப் பிரிந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் குடியேறி அங்குள்ள ஒரு கம்பெனியில் கணக்காளராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது தூத்துக்குடி நேதாஜிநகரை சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து தூத்துக்குடி மாதா நகர் அருகேயுள்ள குமரன் தியேட்டர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம்தான் சம்பவம் நடந்த வீட்டிற்கு குடிவந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு எட்வின் வெளியூருக்கு சென்று விட்டார்.

கவிதா உடல் கிடந்த வீட்டின் உள்பகுதி பூட்டியிருந்தாலும் அந்த அறையின் கதவு தனியாக கழற்றி எடுக்கும் நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வீட்டை வாடகைக்கு பிடித்து கொடுத்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

எட்வினுடன் வசித்து வந்த நிலையிலேயே கவிதாவிற்கு பல ஆண்களிடம் தொடர்பு இருந்துள்ளது.

எட்வினுடன் கவிதா வீடு காலி செய்து புதிய வீட்டிற்கு பொருட்களை ஜோதிபாசு நகரைச் சேர்ந்த கருப்பசாமி (32) என்பவரது லோடு ஆட்டோவில் கொண்டு வந்துள்ளனர். அவர் பொருட்களை இறக்குவதற்கு குறைந்த கட்டணமே வாங்கியுள்ளார்.

இதனால் கருப்பசாமியை கவிதாவுக்கு பிடித்து போக தனது செல்போன் நம்பரை அவரிடம் கொடுத்து, இரவு 10. 30 மணிக்கு மேல் வரச் சொல்லியுள்ளார். அதன்படி இரவு வீட்டிற்கு வந்த கருப்பசாமியுடன் கவிதா தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு அடிக்கடி போன் கால்கள் வந்துள்ளது.

இதனை, உல்லாசத்திற்கு இடையூறாக நினைத்த கருப்பசாமி, செல்போனை ஆப் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கருப்பசாமி அங்கிருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும், கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் மண்ணெண்ணெயை ஊற்றி அவரது உடலுக்கு தீவைத்து விட்டு கதவை பூட்டி வெளிப்பக்கம் இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போலீசாருடன் சுற்றிய கொலையாளி

கொலையாளி கருப்பசாமி போலீசார் நேற்று மதியம் கவிதா கொலையான வீட்டிற்கு வந்தது முதல் நேற்று இரவு அவர் சிக்கும் வரையில் போலீசாரின் அருகேயே சுற்றித் திரிந்துள்ளார்.

போலீசாருக்கு தன் மீது சந்தேகம் ஏற்படாதவாறு விசாரணையை தெரிந்து கொண்டே இருந்துள்ளார்.

.

மூலக்கதை