துப்பாக்கி சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட் தீபக் காலில் காயத்துடன் கைது: கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
துப்பாக்கி சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட் தீபக் காலில் காயத்துடன் கைது: கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: கேரள வனப்பகுதியில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட் தீபக், கோவை வனப்பகுதியில் மறைந்திருந்த போது அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவரது காலில் படுகாயம் இருந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு மஞ்சகண்டி வனத்தில் கடந்த 28ம் தேதி மாவோயிஸ்ட், கேரள அரசின் தண்டர் போல்ட் போலீசார் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 மாவோயிஸ்ட்கள் இறந்தனர்.

மாவோயிஸ்ட் குழுவின் ஆயுத பயிற்சியாளரான சட்டீஸ்கரை சேர்ந்த தீபக் (32) உள்பட 3 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பினர்.

ஏ. கே. 47 துப்பாக்கியுடன் தீபக் வனத்தில் பயிற்சி தரும் போட்டோ சமீபத்தில் வெளியானது.

இவரையும் தப்பியோடிய 3 பேரையும் கேரள வனப்பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாரும், கோவையிலுள்ள ஆனைகட்டி, சிறுவாணி, பில்லூர் வனப்பகுதியில் கோவை நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடிப்படை போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான கோவை ஆனைகட்டி மூலக்கங்கன் வனத்தில் மாவோயிஸ்ட்கள் சிலர் துப்பாக்கியுடன் சென்றதாக அந்த பகுதி மலை கிராம மக்கள் பார்த்து, அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கோவை அதிரடிப்படை எஸ். பி. மூர்த்தி தலைமையில் போலீசார் மூலக்கங்கன் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 3 பேர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அவர்களில் தீபக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மற்ற 2 பேரும் தப்பிவிட்டனர்.

தப்பியவர்கள் ஸ்ரீமதி, சோனா என்று தெரியவந்துள்ளது. தீபக்கின் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த படுகாயம் இருந்ததால் அவரால் வேகமாக நடக்க முடியாத நிலையில், போலீஸ் வருவது தெரிந்தும் தப்ப முடியாமல் சிக்கி ெகாண்டுள்ளார்.

கைதான தீபக்கை கோவை வீரபாண்டி பிரிவில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு முகாம் அலுவலகத்துக்கு கொண்டு வந்து முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதையறிந்த ேகரள அரசின் தண்டர் போல்ட் போலீசார் தீபக்கை தங்கள் வசம் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஒப்படைக்கப்படவில்லை.
முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் தீபக்குக்கு உள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவரது காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிரடிப்படையினர் கூறுகையில், தீபக் மீது கோவை மற்றும் தமிழக எல்லைக்குள் வழக்கு இருக்கிறதா?, இல்லையா? என உறுதி செய்ய முடியவில்லை.

அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே அவர் தமிழக எல்லைக்குள் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட விவரங்களை அறிய முடியும்’ என்றனர்.

தீபக்கிடம் மாவோயிஸ்ட் கும்பலின் நடமாட்டம், கோவை மற்றும் கேரள மாநிலத்தில் அவர்களின் செயல் திட்டம், மாவோயிஸ்ட் குழுவில் உள்ளவர்களின் விவரம் குறித்து, தீபக் அளித்த தகவல்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளதாகவும், தீபக்கிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை