ஜம்முவில் கடும் பனி போக்குவரத்து துண்டிப்பு

தினகரன்  தினகரன்
ஜம்முவில் கடும் பனி போக்குவரத்து துண்டிப்பு

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது நாளாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நேற்று முன்தினம் தடை செய்யப்பட்டது. நேற்றும் இதே நிலை நீடித்ததால் இரண்டாவது நாளாக நேற்றும் வாகன போக்குவரத்தை அதிகாரிகள் தடை செய்தனர். இதேபோல் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களை சோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகால் சாலையில் மூன்றாவது நாளாக நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டதன் காரணமாக சுமார் 4000 வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மூலக்கதை