6,000 ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது: 2 சவூதி ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றசாட்டு!

தினகரன்  தினகரன்
6,000 ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது: 2 சவூதி ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றசாட்டு!

வாஷிங்டன்: கடந்த 2015ம் ஆண்டு 6,000 ட்விட்டர் பயனர்கள் குறித்து சவூதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அலி அல்சபரா, அகமத் அபவும்மோ ஆகியோர் சவூதி அரச குடும்பத்தில் பணிபுரிந்த அகமத் அல்முத்தேய்ரி என்பவருடன் இணைந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இரு ட்விட்டர் ஊழியருக்கும் சவூதி அதிகாரிகளுக்கும் இடையிலான இடைத் தரகராக அல்முத்தேய்ரி செய்யப்பட்டு வந்துள்ளார். அமெரிக்காவுக்குள் சவுதியை சேர்ந்தவர்கள் மீது உளவுக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 6,000 பயனர்களின் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் ஆகியவை கசிந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் அனைவரும் சவுதி அரேபிய அரசு குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ஆவர். இது தொடர்பாக வாஷிங்டனில் வசித்து வந்த அகமத் அபவும்மோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எப்.பி.ஐ உளவுப் பிரிவுக்கு பொய்யான அறிக்கை மற்றும் ஆவணங்களை வழங்கியதாகவும் அபவும்மோ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஊடக கூட்டு முகாமையாளராக பதவி வகித்த இவர் 2015 இல் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மற்ற இருவரும் சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சவுதி அரேபியாவிற்கு வழங்கிய ஊழியர்களுக்கு அந்நாட்டு அரசு பரிசுத்தொகை வழங்கியதாக அமெரிக்கா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்டுபிடித்த எப்.பி.ஐ-க்கு நன்றி தெரிவித்துள்ள ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

மூலக்கதை