தொழில் துவங்க விரைந்து அனுமதி வழங்க உத்தரவு

தினமலர்  தினமலர்
தொழில் துவங்க விரைந்து அனுமதி வழங்க உத்தரவு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு, ஒற்றைச்சாளர முறையில் விரைவில் அனுமதி அளிக்க, விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான குழுவுக்கு அனுப்ப, தொழில் வணிக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், நிறுவனங்கள் தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும், ‘தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம்’ 2018, ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.ஒற்றைச்சாளர முறையின் செயல்பாடுகள் குறித்து, மாதந் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த கூட்டத்தில், விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவாக அனுமதி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது பல்வேறு துறைகளின் கீழ், 29 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. வணிகம் எளிதாக்குதல் சட்டத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் கால அவகாசத்திற்குள், அனுமதி மற்றும் தடையில்லா சான்றுகளை விரைவாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை விரைவில் முடித்து வைக்க, மாவட்ட அளவிலான சிறு, குறு, நடுத்தர நிறுவன குழுவுக்கு அனுப்பி வைக்க, பொது மேலாளர் மற்றும் மண்டல இணை இயக்குனர்களுக்கு, தொழில் வணிக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –

மூலக்கதை