அடுத்த கல்வியாண்டு முதல் 8ம் வகுப்புக்கு முப்பருவ முறை பாடப்புத்தகம் இனி ஒரே புத்தகமாக கிடைக்கும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்த கல்வியாண்டு முதல் 8ம் வகுப்புக்கு முப்பருவ முறை பாடப்புத்தகம் இனி ஒரே புத்தகமாக கிடைக்கும்

சென்னை: எட்டாம் வகுப்பு முப்பருவ பாடப்புத்தகங்கள் இனிமேல் ஒரே புத்தகமாக அச்சிட்டு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு பொதுக்கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதில், முதலில் முப்பருவ முறை தொடக்க கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்பு என்ற அடிப்படையில் கொண்டு  வரப்பட்டது. ஒரு பருவத்துக்கு ஒரு பாடப்புத்தகம் என அச்சிட்டு வழங்கப்பட்டது.

இதன்படி ஒரு  ஆண்டில் ஒரு வகுப்புக்கு 3 புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 5, 8ம் வகுப்புகளுக்கு மத்திய அரசு பொதுத் தேர்வு கொண்டு  வந்துள்ளதால் முப்பருவ பாடப்புத்தகங்களை ஒரே புத்தகமாக அச்சிட்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்  கடந்த 2012-13ம் ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் 9, 10ம் வகுப்புகளிலும் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்பட்டது.   இந்நிலையில் 2019ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.



அதனால் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பருவ முறை பாடப்புத்தகங்கள் 3 பிரிவுகளாக அல்லாமல் ஒரே புத்தகமாக ஒன்றிணைக்கப்பட்டு வழங்கினால் பொதுத் தேர்வுக்கு வசதியாக இருக்கும் என்று மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார். இதை அரசு பரிசீலித்து, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-21ம் கல்வி ஆண்டில் இருந்து முப்பருவ பாட நூல்களை ஒரே பாடநூலாக அச்சிட்டு வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனருக்கு அனுமதி அளித்து அரசு  ஆணையிடுகிறது.

இவ்வாறு அரசாணையில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்புக்கான முப்பருவ பாடப்புத்தகம் ஒரே புத்தகமாக அச்சிட்டு வழங்கப்படும்.

.

மூலக்கதை