19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இடமாற்றம் ஏன்?...ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் திடீர் முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும்.
சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும். அதற்காக, டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதன்படி அடுத்த ஆண்டு (2020) நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் ஆட்சி மன்ற குழு நேற்று முடிவு செய்தது.
இதுகுறித்து ஆட்சி மன்ற குழு கூறுகையில், ‘ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிச. 19ம் தேதி நடக்க இருக்கிறது.
பாரம்பரியமான பெங்களூருவில் இருந்து இந்த முறை முதன்முறையாக கொல்கத்தாவுக்கு செல்கிறது’ என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்த மைதானம் கொல்கத்தா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் 2019 சீசனின் போது அணிகளுக்கு மொத்தம் ரூ. 82 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதே, 2020 ஐபிஎல் சீசனுக்காக அணிகளுக்கு ரூ. 85 கோடி ஒதுக்கப்படுகிறது.
ஒவ்வொரு அணியும் முந்தைய ஏலத்தின் போது மீதமான தொகையுடன் கூடுதலாக ரூ. 3 கோடி அளவிற்கு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
.