அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: ஆர்எஸ்எஸ், இஸ்லாமிய அமைப்புடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: ஆர்எஸ்எஸ், இஸ்லாமிய அமைப்புடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் உச்சநீதிமன்ற  அரசியல் சாசன அமர்வு வருகிற ஒருசில நாட்களில் தீர்ப்பு வழங்கவுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பை, இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளும் உற்றுநோக்கி வருகின்றன.

இந்த தீர்ப்பு குறித்த செய்திகளை சேகரிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களும் இந்தியா வர உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீர்ப்பு எத்தகையதாக இருப்பினும், மத உணர்வுகளை தூண்டி அதன்மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக, இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ், சங் பரிவார் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளிடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், டெல்லியில் இரு அமைப்பு தலைவர்களிடையேயான சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பாஜ கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் ஹூசைன் தலைமையில், ஆர்எஸ்எஸ், சங் பரிவார் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, ‘நாட்டில் எந்த சூழலிலும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஆதரித்து அளவுக்கு அதிகமாக கொண்டாடுவதோ அல்லது எதிர்ப்பு தெரிவித்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது.

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, ஷியா பிரிவு மதகுரு ஜாவத் கூறுகையில், ‘‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாரும் வெற்றி, தோல்வியாக பார்க்கக் கூடாது.

தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்’’ என்றார்.

ஏற்கனவே, பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும், அயோத்தி தீர்ப்பு குறித்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதற்கிடையே, அயோத்தி தீர்ப்புக்காக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை