தென்மாநில அமைச்சர்கள் ஆலோசனை திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து விவாதிக்க தென்மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று காலை திருவனந்தபுரத்தில் நடந்தது. பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி 16ம் தேதி மாலை 5 மணிக்கு ேகாயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல கால பூஜைகளை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட தென் மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர்.
இந்த நிலையில் தென் மாநில பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மண்டல கால பூஜைக்கான நடை திறப்பதற்கு முன்பு தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆலோசனை கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது.
காலை 11 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் வேலம்பள்ளி நிவாசராவ், புதுச்சேரி மாநில விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் தென்மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த ஆண்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.