INX மீடியா முறைகேடு: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு...டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை

தினகரன்  தினகரன்
INX மீடியா முறைகேடு: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு...டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: கடந்த 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும்  முறைகேடுகள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் சிபிஐ.யும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்தது. இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்: இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தன.  இதையடுத்து ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்ததால் தீர்ப்பு  மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.நிபந்தனையுடன் ஜாமீன்: இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா மற்றும் ஹரிசிக்கேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,”ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்குகிறது. அவர் பிணையத் தொகையாக ரூ.1 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும், வெளிநாடு எங்கும் செல்லக் கூடாது. அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள்  அழைக்கும் போதெல்லாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ப.சிதம்பரம் விடுதலையில் சிக்கல்: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை பொருத்தமட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு தரப்பும் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன்  என்பது சிபிஐ தொடர்ந்த வழக்கில் மட்டும்தான். இதில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் ப.சிதம்பரம் விடுதலையாகி  வெளியில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ப.சிதம்பரம் நாளை பிற்பகல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரணை: இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 7 நாள் காவலில்  தனது அலுவலகத்தில் வைத்து ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை காவல் (நாளை) 24-ம் தேதி முடியும் நிலையில், அன்றைய தினம் குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது. முன்னதாக,  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கடந்த 18ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட மொத்தம் 14 பேர் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூலக்கதை