ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு

தினகரன்  தினகரன்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல்  செய்தார்.ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம்  கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர்  அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தொடர் விசாரணையில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் இன்று பிற்பகல் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை  தொடர்பாகவும் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.இந்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வர முடியாத நிலை உள்ளது.இந்த நிலையில் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பிய அனைத்து  நேரத்திலும் தவறாமல் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளேன். இருப்பினும் மேற்கண்ட வழக்கில் சிபிஐ தரப்பில் கைது செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும் தற்போது கைது செய்து காவலில்  வைத்து விசாரித்து வருகிறது. இதில் எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து அவரது ஜாமீன் மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மூலக்கதை