பிரேசில் கடற்கரை ஓரங்களில் படிந்த பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

தினகரன்  தினகரன்
பிரேசில் கடற்கரை ஓரங்களில் படிந்த பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

பிரேசில்: பிரேசில் நாட்டில் உள்ள கடற்கரை ஓரங்களில் படிந்த பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள பெர்னம்புகோ மாநிலத்தின் சுற்றுலா தளமான போர்டோ டி கலின்ஹாஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் சில நாட்களாக பெட்ரோலிய கழிவுகள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. அதனை பார்த்த உள்ளூர் மக்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் கைகளாலும், பாலித்தீன் பைகள் கொண்டும் அடர் பெட்ரோலிய கழிவுகளை அள்ளிச் சென்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதியிலிருந்து சுமார் 600 டன்னுக்கும் அதிகமான பெட்ரோலிய கழிவுகளை அகற்றியதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெர்னம்புகோ மாநிலத்தில் உள்ள கடற்கரை ஓரங்களில் படிந்த அடர்த்தியான பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ராணுவ வீரர்களும் களமிறங்கியுள்ளனர். கடற்கரை மணலை சலித்து அவற்றில் படிந்துள்ள பெட்ரோலிய கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. பெர்னம்புகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய இந்த பெட்ரோலிய கழிவுகள் கடலில் கலப்பதற்கு வெனிசுலா நாடு தான் காரணம் என்று பிரேசில் அரசு குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில் அதனை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை