பிசிசிஐ தலைவராக பதவியேற்றார் சவுரவ் கங்குலி: கங்குலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்

தினகரன்  தினகரன்
பிசிசிஐ தலைவராக பதவியேற்றார் சவுரவ் கங்குலி: கங்குலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம் பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், மும்பையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். கங்குலி தலைமையில் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தலைவர் பதவியில் இருக்கும் சவுரவ் கங்குலி, முதல் தர கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வாரியத்தின் பெருமையை மீட்டெடுக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில், நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார். இதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. பிசிசிஐயின் செயலாளராக உள்ள உள்துறை அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும், துணை தலைவராக உத்தரகாண்டை சேர்ந்த மஹிம் வர்மாவும் பொறுப்பேற்ற இருக்கிறார்கள். பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாகூரேவின் சகோதரர் அருண் துமல் பொருளாளராகவும், இணை செயலாளராக கேரளாவை சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் பொறுப்பேற்ற இருக்கின்றனர். முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. பிசிசிஐ நிர்வகிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்ப்படி நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது. புதிதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த குழு பதவி விலக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மூலக்கதை