புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு பாசிக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். புதுச்சேரி மாநில அரசின் சார்பு நிறுவனமாக பாசிக் தட்டன்சாவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள. இவர்களுக்கு சுமார் 60 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை, இதற்காக இவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள், இந்த நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாசிக் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இன்றளவும் இவர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்காமல் இருப்பதை கண்டித்து பாசிக் ஊழியர்கள, சட்டமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தார்கள். சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டமன்றத்தின் உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதிக்க வில்லை, இதனால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாதுகாப்பு வளையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மாநில அரசான காங்கிரஸுக்கு எதிராக கோஷங்களை முழக்கமிட்டு வருகிறார்கள். 60 மாதங்களாக சம்பளம் வழங்காததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் , இந்த சூழ்நிலையில் தங்களால் எப்படி தீபாவளி பண்டிகையை நிம்மதியாய் கொண்டாட முடியும் என்று கூறி வருகினறனர்.